உள்ளூர் செய்திகள்

கிராமப்புற மருத்துவ அலுவலர்களை உருவாக்குவதற்கான புதிய படிப்பு

Bachelor of Science (Community Health) என்ற பெயரில் வழங்கப்படும் இந்தப் படிப்பு, சமூக சுகாதார அலுவலர்களின் ஒரு படையை உருவாக்கும் மற்றும் அந்த அலுவலர்கள் துணை சுகாதார மையங்களில் பணியமர்த்தப்படுவார்கள் மற்றும் அடிப்படை சுகாதார விழிப்புணர்வை வழங்குவார்கள். இப்படிப்பு, அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே யோசனையில் இருந்தது இந்த திட்டம். ஆனால் இதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததாலும், மருத்துவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகள் கிராமப்புறங்களில் கட்டாயம் பணிசெய்ய வேண்டும் என்ற விதிமுறை, இடையில் கொண்டுவரப்பட்டதாலும்(அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை), இந்த புதிய படிப்பு நடைமுறைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த புதிய படிப்பில், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், அடிப்படை உடல்கூறியல், உடல் சோதனைகள் மற்றும் சாதாரண நோய்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களைப் படிப்பார்கள். அதாவது, பிரசவ நடவடிக்கைகள், குழந்தை பிறப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்பு, வயிற்றுப்போக்கு சிகிச்சை, சுவாசப் பிரச்சினைகள், தடுப்பூசி போடுதல், டி.பி. நோய்க்கு சிகிச்சையளித்தல் மற்றும் காய்ச்சல் போன்றவைகளுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தோல் தொடர்பான தொற்றுகளுக்கு மருத்துவம் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறான மருத்துவ செயல்பாடுகளை மேற்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படும். இந்த Bachelor of Science (Community Health) படிப்பிற்கு, நாடாளுமன்ற நிலைக்குழு, முன்னதாக அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக வேறுசில மாற்று ஏற்பாடுகளை அந்த நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. பாடத்திட்டம் தயார் தேசிய தேர்வு வாரியம்(National Board of Examination - NBA), இப்படிப்பிற்கான பாடத்திட்டத்தை தயார் செய்துள்ளது. இது மாநில பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இப்படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள், மாநில சுகாதார துறைகளால் விரைவில் அங்கீகரிக்கப்பட்டு, சுகாதார பணிகளில், உயர் பொறுப்புகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்று நம்புவதாக, மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்