வெளிநாட்டினருக்கு இனி வேலை இல்லை: பிரிட்டன் முடிவு
லண்டன்: சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைக்க, பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இதனால், ஏராளாமான இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. பல முன்னணி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக் கின்றன. இதுதவிர, பிரிட்டனை சேர்ந்த 20 லட்சம் பேர் வேலை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பிரிட்டன் அரசு அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளது. இனிமேல், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆள் தேர்வு செய்வதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக, பிரிட்டனில் வேலைக்கு ஆட்கள் தேவை என வெளிநாடுகளில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், அனைத்து நிறுவனங்களிலும் பிரிட்டனை சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்துறை செயலர் ஜாக்யூ ஸ்மித் கூறுகையில், ‘நர்ஸ், ஆரம்ப கல்வி ஆசிரியர், ஓட்டல் நிர்வாகம் ஆகிய வேலைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்கள் தேர்வு செய்வதற்கு பதிலாக, உள்நாட்டிலேயே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதுகுறித்து, பிரிட்டன் அதிகாரிகள் கூறுகையில்,‘அரசின் இந்த நடவடிக்கையால் பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை குறையும். பிரிட்டனில் தற்போது ஐந்து வேலைக்கு ஆள் தேர்வு செய்யப்பட்டால், அதில் நான்கு பேர் வெளிநாட்டினராக உள்ளனர். இனிமேல், இப்படி நடக்க வாய்ப்பு இல்லை’ என்றனர். இந்தியாவில் இருந்து தான் அதிகமானோர் பிரிட்டனுக்கு வேலைக்கு செல்கின்றனர். பிரிட்டன் அரசின் நடவடிக்கையால் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.