மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்
சிவகங்கை: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சேலம் உட்பட எட்டு மாவட்டங்களில் பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான காலியிடங்களை ஆன்லைனில் காண்பிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது. தமிழாசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிவகங்கையில் எட்டு காலியிடங்கள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தை கூட காண்பிக்கவில்லை என புகார் தெரிவித்து தமிழாசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழாசிரியர் கழக மாநில துணை தலைவர் இளங்கோ கூறியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம் மாவட்டங்களில், தமிழாசிரியர் காலியிடங்களை மறைத்துவிட்டனர். இரு ஆண்டுகளாக சிவகங்கையில் பட்டதாரி தமிழாசிரியர் காலியிடங்கள் காட்டப்படவில்லை. சிபாரிசுகளுக்காக சென்னை இயக்குனரகத்திலேயே மறைக்கப்படுகின்றன. எனவே ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு கூறினார். அதிகாரிகள் கூறுகையில், ஆன் லைன் கலந்தாய்வில் காலியிடங்கள் சென்னையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. மாவட்ட அதிகாரிகள் பொறுப்பல்ல என்றனர்.