குத்துச்சண்டை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
அவிநாசி: மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில், திருவள்ளுவர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். திருப்பூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும் பல்லடம் ரோட்டரி கிளப் சார்பில், மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி, பல்லடத்தில் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், நான்கு பிரிவுகளில் அவிநாசி அடுத்த பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், முதலிடம் பெற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் 36-38 கிலோ எடை பிரிவில், இப்பள்ளியை சேர்ந்த மாணவர் சுதாகர், திருப்பூர் பார்க் பள்ளியை சேர்ந்த மணியை, தோற்கடித்தார். 48-50 கிலோ எடை பிரிவில் இப்பள்ளி கோகுல், பள்ளிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி விக்னேஷை வென்றார். இதேபோல், 55 கிலோ எடை பிரிவில் திருவள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிக்குமார், பார்க் பள்ளியை சேர்ந்த மனோஜ்குமாரை வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட 52 கிலோ எடை பிரிவில், இப்பள்ளி மாணவர் சந்திரகாந்த், பள்ளிப்பாளையம் அரசு பள்ளி மாணவர் தினேஷை தோற்கடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.