உள்ளூர் செய்திகள்

எவர்வின் பள்ளியில் பட்டம் இதழ் துவக்க விழா

சென்னை: தினமலர் நாளிதழ் சார்பில், வாரமலர், சிறுவர்மலர் இணைப்பு களை தொடர்ந்து, 2016 ஜன., 18 முதல், பட்டம் என்ற பெயரி லான, மாணவர் இதழ் புதிய இணைப்பாக வழங்கப்படுகிறது. இதை கொண்டாடும் விதமாக, சென்னை, கொளத்துாரில் உள்ள, எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று துவக்க விழா நடந்தது. இதில், தினமலர் நாளிதழின் துணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பட்டம் இதழின் ஆலோசகர் ஞாநி, ஆசிரியர் குழுவினர் மற்றும் பள்ளியின் முதன்மை செயலர் வி.மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் புருஷோத்தமன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பஞ்ச பூதங்கள் தொடர்பான சிறப்பு வினாடி-வினா நிகழ்ச்சி நடந்தது.  பட்டம் இதழின் செய்தி ஆசிரியர் ரமேஷ் வைத்யா பேசும்போது, மாணவர்களுக்காகவே, ஒரு செய்தி பத்திரிகை என்பது, தமிழ் இதழியலில் இதுவரை இல்லாத முயற்சி. பட்டம் துவக்க விழாவில் பங்கேற்ற மாணவர்களாகிய நீங்கள், இந்த வரலாற்று சம்பவத்தில் இடம் பெறுகிறீர்கள், என்றார். பட்டம் இதழ் ஆலோசகர் ஞாநி பேசியதாவது: பட்டம் என்பது காற்றாடியையும் குறிக்கும்; கல்வியின் முடிவில் பெறும் பெருமையையும் குறிக்கும். அறிவு இல்லாத சந்தோஷமும் கூடாது; மகிழ்ச்சி இல்லாத வெற்று அறிவும் கூடாது. இந்த, இரண்டையும் உங்களுக்கு தரும் நோக்கத்திலேயே இந்த இதழ் தொடங்கப்பட்டுஉள்ளது. இது, உங்களுக்கு நிறைய கொடுக்கும். இன்னும் என்ன வேண்டும் என கேட்டு, எங்களை வேலை வாங்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இத்தனை நாள் பத்திரிகையாளராக இருந்த அனுபவத்தில், மாணவர்களுக்காக பணியாற்றும் போது தான் நிறைவாக உணர்கிறேன். உங்களுடன் பேசும் போது நானும் சிறுவனாகி விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். வினாடி - வினா நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தினமலர் நாளிதழின் துணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ், பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பட்டம் இதழைச் சிறப்பிக்கும் விதமாக, மாணவர்கள், பட்டங்களை பறக்க விட்டு விழாவை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்