உள்ளூர் செய்திகள்

தமிழ் நூல்களை பாதுகாக்க முன்னாள் நீதிபதி வேண்டுகோள்

திருப்புடைமருதூர் கோவில் நாறும்பூ நாதரின் திருவிளையாடற் புராணம் நூலிற்கு பேராசிரியர் பசுபதி எழுதிய உரை நூல் வெளியீட்டு விழா சென்னை யில் நடந்தது. முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்தினர். வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன், தமிழக அரசு முன்னாள் நிதித்துறைச் செயலர் முனைவர் சுவாமிநாதன், செம்மொழித் தமிழ் உயராய்வு மைய இயக்குனர் ராமசாமி, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மகாலிங்கம், ஆன்மிக எழுத்தாளர் சீனிவாசன், இசையறிஞர் லலிதா சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரத்தினவேல் பாண்டியனின் பேத்தி லலிதா பாரதி பாடிய இன்னிசைக் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் நாறும்பூ நாதர் திருவிளையாடற் புராணம் உரைநூலை வெளியிட, சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார். லலிதா பாரதியின் இன்னிசைத் தகடை ரவிச்சந்திரன் வெளியிட, பாடகி லலிதா சிவக்குமார் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ரத்தினவேல் பாண்டியன் பேசும் போது, நாறும்பூ நாதரின் திருவிளையாடற் புராணத்தைப் படித்த பின், அனைவரும் இதைப் படித்து பயனடைய வேண்டும் என்று நினைத்தேன். 2005ம் ஆண்டில் இந்நூல் வெளியிடப்பட்டது. ஆனால், பாடல்களின் பொருளை புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. அனைவரும் படித்து பயனடைய நூலிற்கு உரைநடை எழுத வேண்டும் என பசுபதியைக் கேட்டுக் கொண்டேன். செலவை நானே ஏற்றுக் கொண்டேன். நூலிற்கு எளிய உரைநடையை அமைத்துள்ளார் பசுபதி. சேக்கிழார் ஆராய்ச்சி மையம் இந்நூலை சிறந்த நூல் என அறிவித்துள்ளது என்றார். கோபால கிருஷ்ணன் பேசும் போது, இந் நூலை வெளியிட்டதன் மூலம், தமிழகத்தின் பழைய நாகரிகம், பெருமை மற்றும் இக்கோவிலின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு சிறப்பான செயலைச் செய்துள்ளார் ரத்தினவேல் பாண்டியன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்