ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு: பள்ளி ஆசிரியர்கள் பரிதவிப்பு
தமிழகத்தில் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கென பட்ஜெட்டில் புதிதாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கோவை, ஈரோடு கல்வி மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட சில உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டும் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஜூலை முதல் சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுபற்றி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவை கல்வி மாவட்டத்தில் சின்னத்தடாகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாதேகவுண்டன்புதூர் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளிலும் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுபற்றி கல்வித் துறை அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள், முதல்வர் ஆகியோருக்கு பல முறை மனு அனுப்பியும் பலன் இல்லை. தீபாவளி பண்டிகையை கொண்டாடக் கூட பணமில்லாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். விரக்தி அடைந்துள்ள ஆசிரியர்கள் பணியில் ஆர்வமுடன் செயல்பட முடியாமல் உள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட பிற பள்ளிகளில் சம்பளம் வழங்கப்பட்டு விட்ட நிலையில், கோவை, ஈரோடு கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்காமல் அரசு பாரபட்சம் காட்டுவதன் மர்மம் புரியவில்லை. தீபாவளி நாளுக்கு முன்னதாக மூன்று மாத சம்பளத்தையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.