இளைஞர்கள் பலம், பலவீனத்தை அறிந்து செயல்பட வேண்டும்!
திருப்பரங்குன்றம்: இளைஞர்கள் தங்கள் பலம், பலவீனத்தை அறிந்து செயல்பட வேண்டும் என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேசினார்.தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா தலைவர் ஹரி தியாகராஜன் தலைமையில் நடந்தது. முதல்வர் பழனி நாதராஜா வரவேற்றார். அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது: இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடு இந்தியா. அதிகம் படித்த இளைஞர்களை கொண்ட மாநிலம் தமிழகம். இளைஞர்கள் தனது பலம், பலவீனத்தை அறிந்து திறம்பட அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது போதைப் பொருட்களும் அலைபேசியும் தான். இரண்டுக்கும் அடிமையாவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.இந்தியாவில் இன்னும் 20 ஆண்டுகளே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குகின்றன. அடுத்த 15 ஆண்டுகளுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை தேடுவதை தவிர்த்து தொழில் முனைவோர்களாக உயர வேண்டும். படிப்பை முடித்த மாணவர்கள் எந்த வேலையில் சேர்ந்தாலும் முழு ஈடுபாட்டுடனும், விருப்பத்துடன் பணியாற்ற வேண்டும். தோல்விகள் ஏற்பட்டால் அதை வெற்றிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.இளங்கலையில் 938 பேர், முதுகலையில் 153 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.