பள்ளி செல்லா குழந்தைகள் இம்மாத இறுதியில் கணக்கெடுப்பு
கோவை: அரையாண்டு தேர்வு விடுமுறை சமயத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் மே மாதம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தி, இடைநிற்றல் தழுவியவர்களை, மீண்டும் முறைசார் பள்ளிகளில் சேர்க்க, வழிவகை செய்யப்படுகிறது.14 வயதுக்குள் மீட்கப்படும் குழந்தைகள், வயது அடிப்படையில், உரிய வகுப்பில் சேர்க்கப்படுவர். முதல் மூன்று மாதங்களுக்கு, அடிப்படை கல்வி அளிக்கப்பட்டு பின், வழக்கமான பாடங்கள் சொல்லித்தரப்படும்.கல்வியாண்டு இடையில் அதிக நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை, உடனே அக்கல்வியாண்டிலே படிப்பு தொடர செய்ய, அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது. இதன்படி, இம்மாத இறுதியில், அரையாண்டு தேர்வு விடுமுறை அளிப்பதால், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி துவங்கி சில நாட்கள் வகுப்புக்கு வந்தவர்கள், தொடர் விடுப்பு எடுத்திருந்தால், இடைநிற்றல் தழுவியவர்களாக கருதப்பட்டு, ஆய்வு செய்யப்படும். இப்படி பள்ளி வாரியாக, அதிக நாட்கள் விடுப்பு எடுத்தோர் பட்டியல் திரட்டப்படுகிறது.இதில், மீட்கப்படும் குழந்தைகளின் விபரம், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை குறித்து, பிரத்யேக செயலியில் பதிவேற்றப்படும். இப்பணிகள், அரையாண்டு விடுமுறையின் போது மேற்கொள்ளப்படும் என்றனர்.