அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பண்ணையில் பயிற்சி
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இயற்கை பண்ணையில் விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்,1 படிக்கும், வேளாண் அறிவியல் பாட பிரிவு மாணவர்கள் வரப்பாளையத்தில் உள்ள ஜீவா அங்கக மற்றும் இயற்கை பண்ணையில் உள்ளுறை பயிற்சி பெற்றனர்.இதில், நிலத்தை தயார் செய்வது, இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் முறைகள், களை எடுப்பது, பூச்சி மேலாண்மை, தென்னை, காபி, மஞ்சள், வாழை சாகுபடி முறைகளையும், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் முறைகளையும், விற்பனை செய்யும் விபரங்களையும் நேரடி செயல் விளக்கத்துடன் முன்னோடி விவசாயிகள் ராமசாமி, ஜீவானந்தம் ஆகியோர் விளக்கினர்.நிறைவு நாள் நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கம், மாவட்ட பொருளாளர் ரங்கநாதன், நவீன விவசாயம் குறித்து எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜஜோதி, விவசாய ஆசிரியர் சரஸ்வதி மற்றும் விவசாய பயிற்றுனர் ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.