பத்து ஆண்டுகளுக்கு மேல் முதல்வர் பதவி கூடாது
கோவை: பல்கலை மானியக்குழு விதிமுறையின் படி, ஒரு நபர் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் மட்டுமே கல்லுாரி முதல்வர் பதவியில் வகிக்க முடியும். பாரதியார் பல்கலையில், விதிமுறை மீறி பல கல்லுாரிகளில், முதல்வர்கள் பல ஆண்டுகளாக பொறுப்பு வகிப்பதாக புகார் எழுந்துள்ளது.கடந்த, 2018 பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, முதல்வராக ஒரு நபர் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் தொடர முடியும். காலம் கடந்த பின், சம்பந்தப்பட்ட கல்லுாரியில் அவரின் துறையில் பேராசிரியராக பணியை தொடர அனுமதியுண்டு. ஆனால், தமிழக அரசு, இவ்விதிமுறையை ஏற்றுள்ளது. பாரதியார் பல்கலை சிண்டிகேட் குழுவும் இவ்விதிமுறையை ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.இருப்பினும், பாரதியார் பல்கலையின் கீழ், 10 கல்லுாரிகளில் நீண்டகாலமாக சிலர் முதல்வர் பொறுப்பை தக்கவைத்துள்ளனர். இதனால், தகுதியுள்ள பலருக்கு முதல்வர் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிடைக்காமலேயே போவதாக அதிருப்தி தொடர்கிறது.இதுகுறித்து, பல்கலை நிர்வாகி ஒருவர் கூறுகையில், பாரதியார் பல்கலையின் கீழ், 45 வயதில் முதல்வராக பொறுப்பேற்ற சிலர், 60 வயது வரை முதல்வராகவே தொடர்கின்றனர். பல்கலை சிண்டிகேட் ஒப்புதல் அளித்தும்; இவ்விதிமுறை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். சில கல்லுாரிகளில் முதல்வர் பதவி உயர்வுக்காக காத்திருப்போருக்கு, வாய்ப்பு கிடைக்காமலேயே ஓய்வு பெறும் நிலை தொடர்கிறது. தமிழக அரசு, சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ள இவ்விதிமுறையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர, உயர்கல்வித்துறை செயலர் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றார்.