செயற்கை நுண்ணறிவு பிரிவில் இருக்கிறது எக்கச்சக்க வாய்ப்பு
கோவை: கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியின், 18வது பட்டமளிப்பு விழா, நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது.அரசன் ஆட்டோ காஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இதில் அவர் பேசியதாவது: வளரும் இளம் தொழில் முனைவோருக்கு, செயற்கை நுண்ணறிவு பிரிவில் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் அன்றாடம் பார்க்கும் சம்பவங்களிலிருந்து, புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அனுபவங்கள் வாயிலாக கிடைக்கும் பாடம், ஆழமானதாக இருக்கும்.தொழில் முனைவோராக சாதிக்க, இதுவே சரியான தருணம். மாணவர்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால், வெற்றி பெற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.இளநிலை மற்றும் முதுநிலை பிரிவின் கீழ், 853 மாணவர்கள் பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கல்லுாரி முதல்வர் மனோன்மணி, ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.