சிறார் தட்டம்மை தடுப்பூசி: ஆர்வம் காட்டாத பெற்றோர்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வெள்ள பாதிப்பு அதிகம் இருந்தது. அப்பகுதியில் உள்ள சிறார்களுக்கு, தட்டம்மை - ரூபெல்லா போன்ற நோய் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.எனவே, ஒன்பது மாதம் முதல், 15 வயது வரை உடைய சிறார்களுக்கு, ஏற்கனவே அட்டவணைப்படி தடுப்பூசி போட்டிருந்தாலும், கூடுதல் டோஸ் செலுத்த, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.அந்த வகையில், 27 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ௧௦ நாட்களுக்கு மேலாக, நான்கு லட்சம் சிறார்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன; மீதமுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போட, பெற்றோர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறார்களுக்கு, கூடுதலாக தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடுவதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, பொது மக்கள் தங்கள் சிறார்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு கூறினர்.