பெற்றோர் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: கலெக்டர் பேச்சு
தேனி: பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்&', என பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சியில் கலெக்டர் ஷஜீவனா பேசினார்.பள்ளிகல்வித்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி இடை நின்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவதற்காக படிக்க வேண்டும். குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்தாலே இன்று அரசு அலுவலராகும் நிலை உள்ளது. பள்ளி சென்று திரும்பிய பின் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் நண்பர்கள் போல் பழகி வழிநடத்த வேண்டும்.இன்று படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாணவர்கள் பிளஸ் 2 முடித்து விட்டால் உயர்கல்வியை அவர்களாகவே தேர்வு செய்து கொள்வர். மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஊக்கம் அளிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பதற்கும், தேர்விற்கும் பயப்படக்கூடாது. பள்ளி கல்லுாரிகளில் மாணவர்கள் சுயமாக தொழில் துவங்குவதற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில் பேசினார்.நிகழ்ச்சியில் இடை நின்ற மாணவர்கள் 50 பேர், அவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பின் மாணவர்கள் பள்ளி செல்லவும், அரசு பொது தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர். ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.