சமூக வலைதளங்களில் போட்டோ வேண்டாம்: மாணவிகளுக்கு அட்வைஸ்
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் இணையத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., சுவாதி சிங், சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், எஸ்.பி., பாஸ்கரன் பேசியதாவது:சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூக ஊடக கணக்கிலும் தனிப்பட்ட விவரங்களை பதிவிட கூடாது.சமூக ஊடகங்களில் உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவேற்றுவது, குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களைப் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். அதுவே பாதுகாப்பானது.இதேபோல் சமூக வளைதளங்கில் சுயவிவரங்களை அனைவரும் பார்க்காதவாறு அமைக்க வேண்டும். தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொடர்புகளை தவிர்க்க வேண்டும். பெண்கள் எந்தவொரு சமூக ஊடகத்திலும் தனிப்பட்ட முக்கிய தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்புகளை அணுக வேண்டாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன், தளத்தின் முகவரி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சரிபார்க்க வேண்டும்.ஒவ்வொரு சமூக ஊடக கணக்கிலும் வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். அவற்றை அடிக்கடி புதுப்பிக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.