உள்ளூர் செய்திகள்

அரசு உதவி தொகை ஆவணங்கள்: பெற்றோர் அலட்சியம்

மதுரை: அரசு வழங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பாலினம், படிப்பு, இனம், மதம், மாற்றுத்திறனாளி போன்ற பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவி தொகைகளை பெற மாணவனின் வகுப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆண்டு வருமானம், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கிய வுடன் மாவட்ட ஆதிதிராவிடர், பிற்படுத்தபட்டோர் நலத்துறை அலுவலகத்திலிருந்து உதவி தொகை பெற அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தும். தொடர்ந்து நினைவூட்டல் கடிதங்களும் அனுப்பப்படும்.பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் அரசு உதவி தொகைக்கு தகுதியான மாணவர்களின் விபரங்களை சேகரிப்பர். இதில், மாணவனின் ஆதார், மாணவனின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகம், இனச் சான்று ஆகிய ஆவணங்களை பெற்றோர் கொண்டு வந்து தருவதில் அலட்சியம் காட்டுகின்றனர். பல மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு இருப்பதில்லை. இருக்கின்ற மாணவர்களுக்கு ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளது.பெற்றோர் தினக்கூலிகள், விவசாயிகளாக இருப்பதால் ஆவணங்களை பெற்று தர அவர்களால் இயலவில்லை. இவற்றை பெற்று தர அலைய வேண்டி இருப்பதால் ஒரு நாள் வருமான இழப்பு ஏற்பட்டு விடும் என்ற தவிப்பு அவர்களுக்கு உள்ளது. அரசு உதவி தொகைகளை போதுமான அளவில் ஒதுக்கிய போதிலும், இவற்றை மாணவர்கள் பெற முடியாமல் உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தொடர்ந்து பள்ளிகளை அறிவுறுத்தியும், பெற்றோர் ஆவணங்கள் தருவதில் அக்கறை இல்லாமல் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது.இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க அரசு குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி சிறப்பு முகாம் அமைக்கலாம். இதில், வங்கிகள், வருமானம், இனச் சான்றுகள், ஆதார் அட்டை உட்பட ஆவணங்களை உடனடியாக தருவது, ஆதார் இணைப்பு உட்பட பணிகளை செய்து கொடுத்தால் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற எளிமையாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்