விருதுநகர் போட்டி தேர்வு பூங்காவில் இல்லை குடிநீர்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள போட்டி தேர்வு பயில்வோர் பூங்காவில் குடிநீர் இல்லை. இதனால் அலுவலக வளாக குடிநீர் தொட்டிக்கு மாணவர்கள் வந்து செல்கின்றனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போட்டி தேர்வு பயில்வோர் பூங்கா செயல்படுகிறது. இங்கு தினசரி நுாற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து போட்டி தேர்வுக்காக படித்து விட்டு செல்கின்றனர். இவர்களுக்கு நிழற்குடை, மர நிழல் வசதி, உட்கா இருக்கைகள் வசதிசெய்யப்பட்டுள்ளது.இந்த பூங்காவில் ஆங்காங்கே குடிநீருக்காக மண் பானைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எதிலும் குடிநீர் இல்லை. இதனால் மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வருகின்றனர். போட்டி தேர்வு பூங்கா அருகிலே புதிதாக தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வரை பணிகள் முடிவடையாமல் உள்ளது.தற்போது வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது. வெப்பம் காரணமாக மாணவர்கள் குடிநீர் தேடி கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். சிறிது துாரம் தான் என்றாலும், மாணவர்கள் இருப்பிடத்திலே கிடைக்க செய்தால் நன்மையாக இருக்கும்.மேலும் இந்த பூங்காவில் சனி, ஞாயிறும் மாணவர்கள் படிக்க வருவர். ஆனால் கலெக்டர் அலுவலக குடிநீர் தொட்டியிலோ அந்நேரங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதனால் அந்நேரங்களில்மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.படிப்பதற்காக கொண்டு வரும் 1லிட்டர் குடிநீரும் காலை 11:00 மணிக்குள் காலியாகி விடுகிறது. போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு தேவைப்படும் குடிநீர் வசதியை அந்த பூங்காவிலே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.