தலைமை ஆசிரியர் இடமாற்றம்; கண் கலங்கிய மாணவர்கள்
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்று சென்றபோது மாணவர்கள் கண் கலங்கி அழுதனர்.குஜிலியம்பாறை ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் 2018ல் இடமாற்றம் பெற்று இப்பள்ளியில் பணியில் சேர்ந்தார். அப்போது 52 மாணவர்களே இருந்தனர். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் சுற்றுப்பகுதியில் மாணவர் சேர்க்கை முகாம்களை வீடு வீடாகச் சென்று நடத்தி தற்போது பள்ளியில் 103 மாணவர்கள் உள்ளனர். தனது சொந்த செலவில் ஒரு நாடக மேடையை கட்டினார்.கஜா புயலுக்குப் பின் அரசு நிதிகளை பெற்று சமையலறை காலை சிற்றுண்டி அறைகளை கட்டினார். இந்நிலையில்தான் நடப்பு கல்வி ஆண்டில் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ்க்கு இடம் மாறுதல் வந்தது. பள்ளியை விட்டு வெளியேறும் எண்ணத்தில் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அறிவுரைகளை கூறிக் கொண்டிருந்தார். மாணவர்களும் வழக்கமான உரை என நினைத்து சந்தோசமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.திடீரென எனக்கு இடமாறுதல் வந்துவிட்டது. நான் வேடசந்துார் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்து விட்டேன் எனக் கூறிய போது மாணவர்கள் கலங்கி அழத்துவங்கினார். அப்போது தலைமை ஆசிரியரும் கண் கலங்கினார். தொடர்ந்து காரில் புறப்பட்ட அவரை மாணவர்கள் கண்ணீரோடு கையசைத்து வழி அனுப்பினர்.