உள்ளூர் செய்திகள்

ஆந்திர அச்சகங்களுக்கு பணி: தினகரன் கடும் கண்டனம்

சென்னை: ஆந்திராவில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் புத்தகங்களை அச்சிடும் பணியில், 30 சதவீதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக, அச்சுத் தொழில் விளங்கி வருகிறது. அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்து, அண்டை மாநிலத்திற்கு அப்பணியை வழங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.தமிழக அரசின் முடிவால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடக்கும், இந்த அச்சுத் தொழிலை நம்பி இருக்கும், அச்சக உரிமையாளர்களோடு, அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும், தமிழகத்திலேயே அச்சிடும் அளவிற்கான அச்சகங்கள் இருந்தும், அண்டை மாநிலங்களுக்கு அப்பணியை வழங்குவது ஏன் என, அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, ஆந்திராவில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஆணையை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கு முழு பணியையும் வழங்க வேண்டும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்