கல்விக்கடன் ரத்து அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான கல்விக் கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.திருப்பூரைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில், 2016 முதல் 2024 வரை நடந்த பல்வேறு தேர்தல்களில், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வாக்குறுதி அளித்தன.தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, கல்விக்கடன் ரத்து திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். போலியாக தேர்தல் வாக்குறுதியை தடுக்க, இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.