ஸ்கூல் பேக் விற்பனையில் இல்லையே சிறப்பு
கோவை: தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்க உள்ள நிலையில், மாணவர்கள் கோடை விடுமுறையின் இறுதி வாரத்தை, அனுபவித்து வருகின்றனர்.வழக்கமாக, இந்நேரத்தில் கோவையின் டவுன் ஹால் பைவ் கார்னர் பகுதியில், ஸ்கூல் பேக்குகள் வாங்கும் மக்களின் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த ஆண்டு அந்த பரபரப்பு காணப்படவில்லை.30 வருஷமாக கடை நடத்துகிறேன். இந்த அளவுக்கு சீசன் டல்லாக இருந்ததே இல்லை, என்கிறார் ஐந்து முக்கு ரோட்டில் ஸ்கூல் பேக் கடை நடத்தி வரும் நசீர்.மேலும் அவர் கூறியதாவது:பள்ளி திறப்புக்கு ஒரே வாரம் தான் இருக்கிறது. இந்த நேரத்தில், வழக்கமாக கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். ஆனால் இந்த ஆண்டு, அந்த ஆரவாரம் இல்லை. ஆன்லைன் ஷாப்பிங், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், இவை எல்லாம் எங்களோட வாடிக்கையாளர்களை, அவர்கள் பக்கம் திருப்பி விட்டார்கள்.போதாக்குறைக்கு, இப்போது ஏராளமான தனியார் பள்ளிகள், புத்தகங்களோடு, பள்ளியின் பெயருடன் ஸ்கூல் பேக்கையும் வழங்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் மட்டுமல்ல; அரசு பள்ளிகளும் இப்போது இலவச பேக் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.எல்லாம் சேர்ந்து எங்கள் சந்தையின் அடித்தளத்தையே மாற்றி விட்டன. என்ன செய்வது என்று தெரியவில்லை.இவ்வாறு, அவர்கூறினார்.