உள்ளூர் செய்திகள்

மூன்றாம் கட்ட மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது

புதுச்சேரி: இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கை சரிபார்ப்பிற்கு பிறகு மூன்றாம் கட்ட மருத்துவ கலந்தாய்வினை நடத்தி சீட் ஒதுக்க சென்டாக் திட்டமிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதா உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு சென்டாக் இதுவரை இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்தி சீட்டுகளை நிரப்பியது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த கடந்த 7 முதல் 11ம் தேதி வரை பெயர் பதிவுகள் பெறப்பட்டன. மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். அதன் பிறகு மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மூன்று முறை காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டது. சீட் ஒதுக்கீடு செய்வதற்கான சீட் பட்டியலும் தயார் செய்யப்பட்டது.இருப்பினும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு சேர்க்கை பட்டியல் வெளியிடப்படவில்லை. எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு கலந்தாய்வு நடத்தினால் மற்ற படிப்பில் சேர மாணவர்களுக்கு கதவும் திறக்கும்.ஆனால் மருத்துவ படிப்பிற்கு கலந்தாய்வு இன்னும் நடக்காமல் உள்ள சூழ்நிலையில் மாணவர்களும் செய்வதறியாது காத்திருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கை சரிபார்ப்பிற்கு பிறகு மூன்றாம் கட்ட மருத்துவ கலந்தாய்வினை நடத்தி சீட் ஒதுக்க சென்டாக் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளையும் சென்டாக் முடுக்கிவிட்டுள்ளது.காத்திருக்கிறோம் இது குறித்து உயர்கல்வி துறை சேர்க்கை அதிகாரிகள் கூறியதாவது:புதுச்சேரியில் மூன்றாம் கட்ட மருத்துவ கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு விட்டது. பங்கேற்க உள்ள மருத்துவ மாணவர்களிடம் பெயர் பதிவும் முழுமையாக பெறப்பட்டு விட்டது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலை இந்திய மருத்துவ கவுன்சில் கடைபிடிக்க சொல்லியுள்ளது. இதன் காரணமாகவே காத்திருக்கிறோம்.அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு பட்டியலை மாநில அரசுகள் ஒப்பிட்டு பார்த்து, அந்த மாணவர்களது பெயர்களை நீக்க சொல்லியுள்ளது. இந்த பட்டியில் நாளை 1 முதல் மாநில அரசுகளின் கைகளுக்கு கிடைக்கும். எனவே சென்டாக்கும் இந்த பட்டியலை சரிபார்த்து அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களை நீக்கும்.எனவே நவம்பர் 3ம் தேதி மருத்துவ படிப்பிற்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது. சீட் கிடைத்த மாணவர்கள் 8ம் தேதிக்குள் மருத்துவ கல்லுாரியில் சேர வேண்டி இருக்கும். அதற்கு ஏற்ப முன்னேற்பாடுகளை மாணவர்கள், பெற்றோர் செய்து கொள்ளலாம்' என்றனர்.எவ்வளவு சீட் காலி எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வினை பொருத்தவரை 341 சீட்டுகள் உள்ளன. இந்த இடங்களுக்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் 657 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நிர்வாக இடங்களுக்கு 658 பேர், கிறிஸ்துவ சிறுபான்மையினர் இடங்களுக்கு 6, தெலுங்கு சிறுபான்மையினர் இடங்கள் 6, என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 64 பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஆயுர்வேதம், பல் மருத்துவ படிப்புகளை பொருத்தவரை நிர்வாக இடங்களுக்கு 918 பேர், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 26 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவசர சுற்றறிக்கைமூன்றாம் கட்ட கலந்தாய்வு குறித்து எம்.சி.சி., அனைத்து மாநிலங்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நீட் யூ.ஜி., கலந்தாய்வில் இணைந்த அகில இந்திய ஒதுக்கீடு மாணவர்களை நீக்குவது கட்டாயமாகும். யூ.ஜி., கலந்தாய்வு மூன்றாம் கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு, இந்தச் சுற்றில் பதவி விலகல் எதுவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்ள வேண்டும். எனவே, மாநில கலந்தாய்வு அதிகாரிகள், அகில இந்திய கலந்தாய்வு மூன்றாம் சுற்றில் இடம் பெற்று, மாநில கலந்தாய்வு மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படாத தேர்வர்களை நீக்கிவிட வேண்டும். நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு எம்.சி.சி., இணையதளத்தில் இருந்து இணைந்த தேர்வர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்