உள்ளூர் செய்திகள்

கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளுக்கு பாதுகாப்பு அவசியம்

கோடை விடுமுறையில் அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகம், ஸ்மார்ட் போர்டு, புரொஜெக்டர்கள், ஹை-டெக் லேப் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. யார் வேண்டுமானாலும் எளிதாக உள்ளே நுழையக்கூடிய சூழலே உள்ளது. இரவில் இன்னும் நிலைமை மோசம்.பாதுகாப்பின்மையால் அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்ப உபகரணங்கள், சத்துணவுப்பொருட்கள், விளையாட்டு சாதனங்கள் திருடப்படுவது தொடர்கிறது. ஜோலார்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் ஜெராக்ஸ் மெசின், லேப்டாப், புராஜெக்டர் திருட்டு, திருவண்ணாமலையில் உக்கம் பெரும்பாக்கத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் இரண்டு சிலிண்டர் திருட்டு போயின.கோவை மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 90 சதவீத பள்ளிகளில் இரவுக் காவலர்கள் இல்லை. விரல்விட்டு எண்ணும் அளவே பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது.தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உதவியுடன் சில பள்ளிகளில் இரவுக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாணவர்கள், ஸ்பான்சர்கள் வாயிலாக கண்காணிப்பு கேமராக்களை சொற்ப பள்ளிகளே அமைத்துள்ளன.கிராமப்புற பள்ளி வளாகத்தில் இரவில் மது அருந்தி, பாட்டில்களை போட்டுச் செல்வது, பள்ளி சொத்துக்களை சேதப்படுத்துவது அதிகம் நடக்கிறது. பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய இரவுக் காவலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.'அனைத்து பள்ளிகளிலும் கேமரா பொருத்தணும்!'பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் கோவை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது: அதிக மாணவர்கள் படிக்கும் பெரிய பள்ளிகளில் பாதுகாவலர்கள் உள்ளனர். துவக்க, நடுநிலை மற்றும் ஊரக பள்ளிகளில் பாதுகாவலர்கள் இல்லை. விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் பள்ளி வளாகத்தில் நுழைவது, வேண்டாத செயல்களில் ஈடுபடுவதும் கட்டுப்பாடில்லாமல் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை, உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து அரசு பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தொடர் விடுமுறை நாட்களில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளூர் போலீசாரின் உதவியையும் கோரலாம். அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்