தனியார் துறை வளர்ச்சி: தயாரிப்பு துறையால் உயர்வு
புதுடில்லி: இந்திய தனியார் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் மீண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள 'பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ.,' குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையின் விபரம்:தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் ஆர்டர் நிலவரங்களை குறிக்கும் பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 58.30 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.இது கடந்த மார்ச் மாதம் 57 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும்; கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இது தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே பயணிக்கிறது.தயாரிப்பு துறை நிறுவனங்களின் வலுவான செயல்பாடுகளே வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் . தேவை வலுவாக இருப்பதாகவும், புதிய ஆர்டர்களின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.ஏற்றுமதியை பொறுத்தவரை, தயாரிப்பு துறை நிறுவனங்கள் கடந்த ஒன்பது மாதங்களில் காணாத அதிவேக வளர்ச்சியையும்; சேவை துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஓராண்டில் மிக குறைந்த வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.உள்ளீட்டு பொருட்களின் பணவீக்கம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சற்றே குறைந்துள்ள நிலையில், எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் இம்மாதமும் அதிகரித்தே காணப்படுகிறது. எதிர்கால வணிக சூழல் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை, மார்ச் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளது. எனினும், புதிய பணியமர்த்தல்கள் கடந்த 10 மாதங்களில் அதிவேக உயர்வை பதிவு செய்து உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.