உள்ளூர் செய்திகள்

இன்றைய மாணவர்களை ஈர்க்கும் கலை, அறிவியல் படிப்புகள்

தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு மாற்றங்கள், உலகளாவிய தேவைகள் ஆகிய காரணங்களால் புதிய வகை கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மாணவர்களின் முதன்மைத் தேர்வாக மாறியுள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, வணிகவியல், டேட்டா சயின்ஸ், மனையியல், உயிர்தொழில்நுட்பம், விசுவல் கம்யூனிகேஷன், கணினிப் பயன்பாட்டியல், உளவியல் போன்ற படிப்புகள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் பகுப்பாய்வு சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.செயற்கை நுண்ணறிவுமுன்பு மாணவர்கள் கணினித் துறையில் வேலை பெற வேண்டும் என்று நினைத்தனர். இப்போது செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் அல்லது தகவல் பகுப்பாய்வாளர் ஆக வேண்டும் என்பதே பலரின் இலட்சியமாக உள்ளது. உயர்ந்த ஊதிய வாய்ப்புகள், உலகளாவிய வேலைத் தேவை, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த பாடத்திட்டங்கள், எதிர்காலத் தொழில்களுக்கு நேரடி தொடர்பு போன்றவை இந்த படிப்புகளுக்கான வரவேற்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. ஆகையால், பல கல்லூரிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு, தகவல் பகுப்பாய்வு, இயந்திரக் கற்றல் போன்ற புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.வணிகவியல்புதிய தொழில்நுட்பப் படிப்புகள் வளர்ந்தாலும் வணிகவியல் படிப்புகளுக்கான தேவை குறையவில்லை. குறிப்பாக, கணக்கியல் மற்றும் நிதியியல், கணினிப் பயன்பாட்டுடன் கூடிய வணிகவியல், நிதி, தகவல் அமைப்பியல் போன்ற பிரிவுகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றன.வணிகவியல் துறை எப்போதும் வேலைவாய்ப்புடன் இணைந்திருக்கும். தற்போது தொழில்நுட்பத்துடனும் இணைந்து வளர்கிறது. இந்த படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் வங்கி, கணக்காய்வு, வரித்துறை, தனியார் நிதி நிறுவனங்கள் போன்ற துறைகளில் வேலை பெறுகின்றனர்.மனையியல் கொரோனா காலத்திற்கு பிறகு மனநலத்தின் முக்கியத்துவம் அதிகமாக பேசப்படத் தொடங்கியது. அதன் விளைவாக மனையியல் படிப்புகளுக்கான மாணவர் ஆர்வமும் உயர்ந்துள்ளது. மனநல ஆலோசனை, குழந்தை மனையியல், நிறுவன நடத்தை ஆய்வு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.உயிர்தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் அறிவியல் ஒருகாலத்தில் குறைந்த வரவேற்பை பெற்ற உயிர்தொழில்நுட்பப் படிப்புகள் தற்போது மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. மருத்துவ ஆய்வு, மருந்துத் தயாரிப்பு, உணவியல் ஆய்வு, மரபணு ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்குக் காரணம்.எதிர்காலத்தில் உயிரியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் இணையும் புதிய ஆய்வுகள் அதிகரிக்கும். உயிர்வேதியியல், நுண்ணுயிரியியல், உயிர்தொழில்நுட்பம் போன்ற படிப்புகள் தற்போது ஆராய்ச்சி விருப்பமுள்ள மாணவர்களை ஈர்க்கின்றன.விசுவல் கம்யூனிகேஷன்சமூக ஊடகங்கள், இணையத் தொடர்கள், காணொளி தளங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியால் விசுவல் கம்யூனிகேஷன் படிப்புகளுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த படிப்பில் திரைப்பட உருவாக்கம், புகைப்படக்கலை, வரைகலை வடிவமைப்பு, விளம்பரத் தயாரிப்பு, சமூக ஊடக உருவாக்கம் ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.கணினி பயன்பாட்டியல் பொறியியல் படிப்புகளின் அதிக செலவு மற்றும் கடுமையான போட்டி காரணமாக பல மாணவர்கள் தற்போது கணினிப் பயன்பாட்டியல் படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். இந்தப் படிப்புகள் வாயிலாக மென்பொருள் உருவாக்கம், இணைய வடிவமைப்பு, தரவுத்தள மேலாண்மை, பயன்பாட்டு உருவாக்கம் போன்ற திறன்கள் கற்க முடியும்.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:பொதுவாக, இன்றைய மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், குறுகிய காலத்தில் தொழில்திறன் வழங்கும் படிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். 'படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்குமா?' என்பதே இன்றைய மாணவர்களின் முதன்மை கேள்வியாக உள்ளது. வகுப்பறை அறிவுடன் சேர்த்து செய்முறை பயிற்சிக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். பொறியியல் படிப்புகளை ஒப்பிடும்போது கலை மற்றும் அறிவியல் படிப்புகள் குறைந்த கட்டணத்தில் கிடைப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். இன்றைய காலகட்டத்தில், ஒரே துறையில் மட்டும் அறிவு போதுமானதல்ல. வருங்காலத்தில் திறன் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலை மற்றும் அறிவியல் படிப்புகளே அதிக ஆதிக்கம் செலுத்தும். மாணவர்கள் இப்போது பட்டப்படிப்பை மட்டும் பார்க்காமல், அதனால் கிடைக்கும் தொழில்திறன் மற்றும் வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்