உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை தலைமை ஆசிரியர்கள் அவதி

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால், பாட வேளைகளை ஒதுக்க முடியாமல், தலைமை ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஏற்கனவே, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக, கடந்த ஆண்டுகளில், 2,000 முதுநிலை ஆசிரியர்கள், 6,000 பட்டதாரி ஆசிரியர்கள், 2,000 இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தலா, 18,000; 15,000; 12,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், இந்தாண்டு மே மாதம் வரை, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நியமிக்கப்பட்ட, 10,000 பள்ளி ஆசிரியர்கள், இந்த ஆண்டும் பணியில் தொடர அனுமதிக்கப்படுவாரா அல்லது புதிதாக மீண்டும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.புதிதாக உருவாகி உள்ள காலிப் பணியிடங்களுக்கும், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக, ஆசிரியர்கள் நியமிக்கலாமா அல்லது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக காத்திருப்பதா என, தலைமை ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதனால், ஆசிரியர்களுக்கு பாட வேளை ஒதுக்க முடியாமல், தலைமை ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஐந்தில் நான்கு பங்கு ஆசிரியர்கள், தற்காலிகப் பணியாளர்களாக உள்ளனர். தற்போது, மேலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன. இதனால், பாடவேளைகளை ஒதுக்க முடியாத நிலை உள்ளது.பள்ளிகள் திறக்கும் போதே, இந்த பணிகளை முடித்திருந்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திருக்கலாம். அரசு காலியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்