உள்ளூர் செய்திகள்

‘கல்வி பெறும் உரிமை சட்டத்தில் மாற்றம் தேவை’

சென்னை: ‘குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் தொடர்பான வரைவு விதிகளில் மாற்றங்கள் தேவை’ என, குழந்தைகள் உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் தாமஸ் ஜெயராஜ் கூறினார். குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட மாதிரி விதிகளை பின்பற்றி, இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான முதல் வரைவு விதிகளை, தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. ‘யுனிசெப்’ அமைப்பின் ஆதரவில், இவ்விதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைப்படும் மாற்றங்கள் குறித்த, சென்னை மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் எழும்பூரில் நேற்று நடந்தது. இதுகுறித்து, குழந்தைகள் உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் தாமஸ் ஜெயராஜ் கூறியதாவது: வரைவு விதிகள் குறித்து கருத்து தெரிவிக்க 20 நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை செயல்படுத்துவதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மாதிரி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ‘உள்ளூர் அதிகார அமைப்பு’ என்பதற்கு மாறாக, தமிழக அரசின் வரைவு விதிகள் முழுவதும், ‘உள்ளூர் கல்வி அதிகார அமைப்பு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம், உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தான் உண்டு என்பது போலவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராகவும் உள்ளது. இலவச கல்வியில், இலவச பாட புத்தகம், சீருடை தவிர்த்து மதிய உணவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தாய்மொழி கல்வி பற்றியும் வரைவு விதிகளில் எதுவும் சொல்லப்படவில்லை. இச்சட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித் துறை அமைச்சரை தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாநில ஆலோசனைக் குழுவில், கல்வி துறை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்களே அதிகளவில் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வியாளர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இதுபோல, மாவட்ட வாரியாக பெறப்பட்ட பல்வேறு ஆலோசனைகள், வரும் 7, 8ம் தேதிகளில், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் இறுதி செய்யப்படும். அவற்றின்படி, வரைவு விதிகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து, துணை முதல்வர் மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆகியோரிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு தாமஸ் ஜெயராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்