புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி டிச., 22 துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் 27வது தேசிய புத்தக கண்காட்சி அடுத்தமாதம் 22ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை 10 நாள் நடக்கிறது.புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் புத்தக கண்காட்சி குழு வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 27வது தேசிய புத்தக கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் டிசம்பர் 22ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா டிச., 22ம் தேதி பிற்பகல் 12:00 மணிக்கு நடக்கிறது.முதல்வர் ரங்கசாமி கண்காட்சியை திறந்து வைத்து, புதிய நுாலை வெளியிடுகிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார், எம்.பி.,கள் வைத்திலிங்கம், செல்வகணபதி கலந்து கொள்கின்றனர்.புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்கின்றனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்களுக்குத் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கண்காட்சியில் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். தினமும் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.இக்கண்காட்சியில் அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற தலைப்பில் கவிதை, பேச்சு, வினாடி வினா, ஓவியப்போட்டிகள் மாணவர்கள், பொதுமக்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.