அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.ஏ.,க்கு மவுசு: எம்.சி.ஏ.,க்கு 2,536 இடங்கள் காலி!
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் இன்ஜி., கல்லூரிகள், கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 270 கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.சி.ஏ., சீட்களின் எண்ணிக்கை 8,966 ; எம்.பி.ஏ., சீட்களின் எண்ணிக்கை 7,779. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) எழுதிய மாணவ, மாணவிகள், பொது கவுன்சிலிங் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் தேர்வு செய்யப்படுகின்றனர். அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.சி.ஏ., எம்.பி.ஏ., சீட்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.,) நடந்தது. எம்.சி.ஏ., கவுன்சிலிங்கில் பங்கேற்க 11,923 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த மாணவர்களுக்கு இரு கட்டமாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 8,966 இடங்களில், 6430 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இன்னும் 2,536 இடங்கள் காலியாகவுள்ளன. முக்கிய கல்லூரிகளில் மட்டும் எம்.சி.ஏ., சீட்கள் நிரம்பியுள்ள நிலையில், பிரபலமடையாத பல கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.சி.ஏ., இடங்கள் காற்று வாங்குகின்றன. அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.பி.ஏ., சீட்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க 15 ஆயிரத்து 31 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்தியாகிவிட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 7,779 இடங்களில் 6,844 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 935 இடங்கள் காலியாகவுள்ளன. ‘டான்செட்’ தேர்வில் 64.6 மதிப்பெண் முதல் 0 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள், எம்.பி.ஏ., கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். மீதியுள்ள 935 இடங்களை நிரப்ப, டான்செட் தேர்வில் ‘மைனஸ் 1’ மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைப்பது பற்றி, இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. கவுன்சிலிங் துவங்கும் முன், புதிதாக அங்கீகாரம் பெற்ற கலை அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லூரிகளில் துவக்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புக்களுக்கு மாணவர்களிடையே ஆர்வம் இல்லை. பெயர் பெற்ற, வேலை வாய்ப்பு உடனுக்குடன் பெற்றுத்தரக்கூடிய கல்லூரிகளில் சேரவே மாணவர்கள் விரும்புகின்றனர். இதனால், புதிதாக துவங்கிய கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சீட்கள் காலியாகவே இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களும் காலியாகவே இருப்பதால், அந்த காலியிடத்தை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். “இந்த ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பான்மையான சீட்கள் நிரப்பப்பட்டுள்ளன. எம்.சி.ஏ.,வுக்கு மாணவர்கள் மத்தியில் போதிய அளவுக்கு வரவேற்பு இல்லாதது தான் இந்த நிலைமைக்கு காரணம்,” என்கிறது உயர்கல்வித் துறை வட்டாரம்.