உள்ளூர் செய்திகள்

சமச்சீர் ஆய்வுக் குழு அறிக்கையை ஜூலை 5 ம் தேதி சமர்ப்பிக்கும்?

சமச்சீர் கல்வியின் தரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, முதலமைச்சர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வி புத்தகங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவினரும், சமச்சீர் கல்வி புத்தகங்களை ஆராய்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு நிறைவடையும் நிலையில், ஆய்வுக் குழு ஜூலை 5 ம் தேதி உயர் நீதிமன்றத்தில் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதா என்பது குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதால், ஆய்வு அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அனைத்து பாடத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே பாடத்திட்டமாக மாற்றும் வகையில் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு 1 முதல் 10ம் வகுப்பு வரையான வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் வகையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருந்தன. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அஇஅதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. சமச்சீர் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி பழைய பாடத்திட்டத்தையே தொடர சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சட்ட திருத்த மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், 1 மற்றும் 6ம் வகுப்பில் சமச்சீர் கல்வியைத் தொடர்வது என்றும், மற்ற வகுப்புகளில் புத்தகங்களை ஆராய ஆய்வுக் குழுவை தமிழக அரசு நியமித்து, இரண்டு வார காலத்தில் இந்த ஆய்வுக் குழு ஆய்வு செய்து அறிக்கைய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் ஒரு வார காலத்தில் சமச்சீர் கல்வி குறித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்