மாற்றுத்திறனாளி மாணவர்கள் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்க, தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் மத்திய அரசு நிதியுதவியுடன் வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து, ஒன்பது முதல் பிளஸ் 1 வரை படிக்கும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் குறித்து, சிறப்பாசிரியர்களால் பள்ளிகள் தோறும் சென்று கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். இதன்பின் ஒன்றியம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், இவர்களுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கப்பட உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான அடையாள அட்டை, தேவையான உபகரணங்களை அரசிடம் பெற்று, கல்வி கற்பித்தல் பணிகளை செய்யவுள்ளனர். இதன் கணக்கெடுப்பை ஜூலைக்குள் நடத்தவும், அதன்பின் இதற்கான மையங்களை தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, "சிறப்பாசிரியர்களுக்கு அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.