மாணவர்களுக்கு களப்பயணம் குறித்த அட்டவணை வெளியீடு
பள்ளிகளுக்கான பாடவேளை அட்டவணையை, அரசு வெளியிட்டுள்ளது. வேலைநாளில், மாணவர்களின் களப்பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை 15 வரை செல்லத்தக்க பத்தாம் வகுப்பு வரையிலான(ஒன்று, ஆறாம் வகுப்புகளைத் தவிர), பாடவேளை அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. காலை 9 முதல், மாலை 3.30 மணிவரை பள்ளிநேரம். காலை 11 முதல் 11.10 மணிவரை இடைவேளை. பகல் 12 முதல் ஒரு மணிவரை உணவு இடைவேளை, என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிக்கேற்ப, பள்ளி துவங்கும் நேரத்தை மாற்றியமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, தலா ஒரு மணிநேரத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்க வேண்டும். கடைசி பாடவேளைக்கு 30 நிமிடத்தில், கல்வி சார்ந்த பிற செயல்பாடுகள் இடம்பெறும். தமிழ், ஆங்கில பாடவேளைகளில் கேட்டல், பேசுதல் திறன் வளர்ப்பு, கணித பாடவேளையில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வரைபடம், புள்ளி வரைபடம் மற்றும் பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு தொடர்பான தகவல்களை கற்பிக்க வேண்டும். இது தவிர சர்வசிக்ஷா அபியான் மூலம் கடந்தாண்டு வரை வழங்கப்பட்ட 409 புத்தகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளில், சுற்றுலா, மனநலம், உடல்நலம், சுகாதாரம், சமூக, கலாசார பழக்கங்கள், ஊடகம், கம்ப்யூட்டர், இணையதளம் வாயிலான அறிவு மேம்பாடு போன்றவை இடம்பெறும். வேலைநாளில், மாணவர்களுக்கான களப்பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.