சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு வாய்ப்பு
சென்னை: “பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் அல்லது நிகழ்ச்சிக்கு வராதவர்கள் அனைவருக்கும் 10 நாட்கள் கழித்து சான்றிதழ் சரிபார்க்கப்படும்,” என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ராமையா கூறினார். இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7,499 பட்டதாரி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதற்காக சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. தமிழ், ஆங்கில மொழிப் பாடத்தில் 7,382 இடங்களும், தெலுங்கு மொழியில் 59, மலையாள மொழியில் 17, கன்னட மொழியில் 14, உருது மொழியில் 26 இடங்களும் என மொத்தம் 7,499 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு 13 ஆயிரத்து 147 பேருக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் அல்லது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பயப்படத் தேவையில்லை. விடுபட்ட அனைவருக்கும் அடுத்த 10 நாட்களில், தனியாக சான்றிதழ் சரி பார்க்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிந்து, தேர்வு பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட துறையிடம் அனுப்புவதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிகமான பணி இருப்பதால் இரண்டு மாதங்களில் தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பட்டியலை ஒப்படைத்து விடுவோம். இவ்வாறு ராமையா கூறினார்.