உள்ளூர் செய்திகள்

லாஜிஸ்டிக்ஸ் துறையில் அதிகரிக்கும் பணி வாய்ப்புகள்

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய வாணிபத்தை மேற்கொள்ளும் துறையாக லாஜிஸ்டிக்ஸ் துறை மாறவிருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. இத்துறையில் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் 4 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகவிருப்பதாக பன்னாட்டு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டொமாட்ஸூவின் முதுநிலை மேலாளர் அதுல் குல்கர்னி தெரிவித்துள்ளார். இத்துறை சமீப காலமாக வெகுவேகமாக வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. எனினும் இத்துறைக்குத் தேவைப்படும் திறனாளர்கள் கிடைப்பது கடுமையான சிரமமாக இருக்கிறது. சப்ளை செயின் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற லாஜிஸ்டிக்ஸ் படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. ஐ.டி. துறையுடன் ஒப்பிடுகையில் இத்துறையில் தரப்படும் ஊதியமும் குறைவாகவே இருக்கிறது. இதனால் திறன் பற்றாக்குறை உருவாகியிருக்கிறது. எனினும் இத்துறையில் தற்போது இடைநிலைப் பணிகளில் நிதி, மார்க்கெட்டிங் மற்றும் மனித வளத்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இத்துறை பற்றிய தகவல்கள் இன்னமும் பரவலாக அறியப்படாததால் தேவைப்படும் திறமைசாலி ஊழியர்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. இத்துறை சமீப காலம் வரை, தனிநபர் அல்லது ஒரே குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. சமீபகாலமாக, பன்னாட்டு நிறுவனங்கள் இதில் நுழைந்து செயல்படத் துவங்கியபின் தான் இத்துறை ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்