சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் உயருமா?
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், விரைவில் துவக்கப்பட உள்ளதால், தங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை, அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரிபவர்கள், தங்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடி வருகின்றனர். இச்சூழ்நிலையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என, சுதந்திர தினத்தன்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்த திட்டத்தால், பணிச்சுமை அதிகரிக்கும். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, அரசு சார்பில், அமைச்சர் வளர்மதி, கடந்த சில தினங்களாக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நேற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், அமைச்சரை சந்தித்து பேசினர். இக்கூட்டமைப்பில், 13 சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. கோரிக்கைகளை கேட்ட அமைச்சர், அவற்றை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.