உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி

மதுரை: ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழ் 4582 பேர் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்களாக பணிபுரிகின்றனர். தமிழக அரசு 2006ல், ஆண்டுதோறும் 500 வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர், என தெரிவித்தது. 2006 முதல் 2012 வரை அந்நடைமுறை பின்பற்றப்பட்டது. 2012--13 ல் 115 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி ஆண்டுக்கு 500 வட்டார வளமைய பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. எனவே, 2012-14 வரை 885 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 2014 ஜூலை 14ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார். தனி நீதிபதி, 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என 2014ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு உத்தரவு: ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில்,2015--16 ல் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்; ஒப்புதல் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அரசு 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். ராஜ்குமார் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்