கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
சரவணம்பட்டி: ராகிங், மாணவர்களுக்கு தண்டனையை தருவதோடு, வாழ்க்கையையும் பாதிக்கும், என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சரவணம்பட்டியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டம், கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் குமார் தலைமை வகித்தார். சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் சாஸ்தா சோமசேகரன், இப்ராஹிம் ஆகியோர் பேசினர். போலீசார் கூறுகையில், ராகிங் தடுப்புச்சட்டம் 1997ம் ஆண்டின்படி ராகிங்கில் ஈடுபடுவோருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க முடியும். இது மாணவர்களின் வாழ்க்கையை பாதிப்பதோடு, பாஸ்போர்ட் பெற இயலாது. ராகிங் பற்றி தகவல் தெரிவிக்க ஒவ்வொரு கல்லுாரியின் வளாகத்தினுள்ளும் ஒரு பெட்டி வைத்துள்ளனர். இதில் வரும் புகார்களை உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.