பெண்களுக்கு கல்வி அவசியம்; நீதிபதி வேலுமணி
அவனியாபுரம்: பெண்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி அவசியம் என உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி பேசினார்.மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். ஒருவர் கற்ற கல்வியை இழக்க முடியாது. அனைத்திற்கும் மூலதனம் கல்வி மட்டுமே. கல்வி கற்றவர் அனைத்திலும் சாதிக்க முடியும். கல்விச்செல்வம் அவசியம். மனிதாபிமான வாழ்விற்கும் கல்வி மிக அவசியம். தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் கட்டாயம் படிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தை தெளிவாக பேச, எழுத கற்றுக் கொள்ள வேண்டும். நமது கலாசாரத்தை எந்த நேரத்திலும் விட்டுவிடாதீர்கள், என்றார். முன்னதாக, முதல்வர் (பொறுப்பு) கார்த்திகாராணி வரவேற்றார். தலைவர் மாரீஸ்குமார், துணைத் தலைவர் முத்தரசு, செயலாளர் கரிக்கோல்ராஜ், பொருளாளர் நல்லதம்பி கலந்து கொண்டனர். 473 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.