பள்ளிகளுக்கு புது மெருகூட்ட தனியாருக்கு பங்கு
அரசு பள்ளிகளில், பொது- தனியார் கூட்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாணவர்கள், அனைத்து வசதிகளும் நிறைந்த வகுப்பறைகள், இலவச சீருடைகள், மதிய உணவு மற்றும் இலவச பாடப்புத்தகங்கள் ஆகிய அனைத்து சலுகைகளும், பி.பி.பி., திட்டத்தின் கீழும் தொடரும். இதுகுறித்து, அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், கல்வித் துறையில் தரமான கல்வி வழங்குவதற்கான பல தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்ய, அரசிடம் போதிய நிதிவசதிகள் இல்லை. இதற்கான மாற்றாக பி.பி.பி., திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சமூகநீதி அடிப்படையில் சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்யும் என்றார். இத்திட்டத்தை அமல்படுத்த ஆர்வம் உடைய, தனியார்கள் அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு, மனித வளத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.