அன்னை தெரசா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா
கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலையின் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை வகித்தார். துணைவேந்தர் அருணா சிவகாமி வரவேற்றார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக முன்னாள் முதன்மை மேலாண்மை இயக்குனர் (வசந்தா முத்துசுவாமி ஆற்றிய பட்டமளிப்பு விழா உரை: மனித வள மேம்பாட்டிற்கு மட்டுமல்ல, குடும்ப முன்னேற்றத்திற்கும் பெண்கல்வி அவசியம். சுதந்திரத்திற்கு பின் 30 ஆண்டுகளில் பெண்கல்வி அதிக வளர்ச்சி பெற்றது. 1971ல் இந்தியாவில் 22 சத வீதமாக இருந்த பெண்கல்வி 2001ல் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது. 100 சதவீதத்தை எட்ட இன்னும் முயற்சி தேவை. அதேசமயம் ஆண்களை விட பெண்கள் அதிகம் கல்வி கற்கும் நிலை உள்ளது. அனைத்து துறைகளிலும் ஆண், பெண் பங்கு முக்கியம். உயர்கல்வி பெறுவதில் மகளிர் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் பங்கு பாராட்டத்தக்கது. ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை இன்று இல்லை. நவீனமயமாக்கல் கொள்கையையடுத்து நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவிகள் எந்த துறையில் முன்னேற வேண்டும் என நினைக்கிறாரோ அதை எட்டி வாழ்க்கையில் மேன்மையடையலாம். இலக்கியம், நடிப்பு, பத்திரிக்கை துறையில் பெண்கள் சாதிப்பதை இன்று பார்க்கிறோம். பலரை இதற்கு உதாரணம் கூறலாம். இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பணிபுரிகின்றனர். ஐ.டி துறை மட்டுமின்றி சுற்றுலா, வர வேற்பாளர்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், வியாபாரம் போன்ற துறைகளிலும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. சாதிக்க துடிக்கும் இளம் மாணவி களுக்கு எல்லாதுறையும் வரவேற்க காத்திருக்கிறது. உலகிற்கு நாம் (இந்தியர்) யாரைவிடவும் குறைவில்லை (ஹம் கிஸி சே கம் நஹி) என உணர்த்துங்கள். இவ்வாறு அவர் பேசினார். கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 192 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பதிவாளர் மணி, டி.ஐ.ஜி., மித்தல், திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார் உட்பட பலர் பங்கேற்றனர்.