ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட சிறுமி
தஞ்சாவூர் : தஞ்சாவூர், மருத்துவக் கல்லுாரி சாலை, எல்.ஐ.சி., காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியின் மகள் இனியா, 10; ஐந்தாம் வகுப்பு மாணவி. இவர், 12 நீதிக்கதைகள் அடங்கிய இனியாஸ் ஸ்டோரிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் கதைக்கு ஏற்ப ஓவியங்களையும் அவரே வரைந்துள்ளார். இந்த புத்தகம் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது.இதுகுறித்து இனியா கூறியதாவது: புத்தகம் வாசிப்பு பழக்கத்தின் முயற்சியாக பிரபல எழுத்தாளர்களின் நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்தேன்; கடினமாக இருந்தது. அதன்பின் தினமும் நான் படித்த புத்தகங்கள், பார்க்கும் நிகழ்வுகளைக் கொண்டு, நானே புத்தகம் எழுத முயற்சித்தேன். பெற்றோர் உதவியாக இருந்தனர்.என் புத்தகத்தில், பெற்றோருக்கு மதிப்பு அளிப்பது, மரம் வளர்ப்பின் அவசியம், தப்புக்கு தண்டனை தீர்வு இல்லை, முயற்சி செய் போன்றவற்றை வலியுறுத்தும் கதைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.