டாக்டர், நர்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் பணியாற்ற, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிய, மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், டாக்டர்கள், நர்ஸ்கள், தலா, 208 பேர், மருத்துவ பணியாளர்கள், 832 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.டாக்டர்களுக்கு மாதம், 60,000; நர்ஸ்களுக்கு, 18,000; மருத்துவ பணியாளர்களில் கிரேடு - 1 பணியாளர்களுக்கு 14,000; உதவியாளருக்கு 8,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.இந்த பணிகளில் சேர விரும்புவோர், வரும் 24ம் தேதிக்குள், அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு ஏப்ரல், 1ல் நடத்தப்பட்டு, 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., இருக்கும் போது, மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், ஏன் பணி அமர்த்த வேண்டும்.இப்பணியிடங்களை, ஏற்கனவே எம்.ஆர்.பி., தேர்வு எழுதி, தகுதி பெற்றவர்களை வாயிலாக நிரப்ப வேண்டும் என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.