தொழில்நுட்ப தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், தன்னார்வ பயிலும் வட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, பல்வேறு வகையான அரசுப்பணி போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ., தகுதிக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணிகளில் காலியாக உள்ள, 839 இடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு, கடந்த ஜூலை, 7ல் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் துவங்குகிறது. இந்த இலவச ஆன்லைன் வகுப்புகளில் இணைந்து பயன்பெற விரும்பும் தேர்வர்கள், 04286-222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நேரடியாக வந்து பயிற்சியில் இணைய விரும்பும் மனுதாரர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி, தங்களது, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.