அண்ணா பல்கலை கல்லூரிகளில் ஆக., 10 முதல் வகுப்புகள்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., - ஏ.சி.டெக்., மற்றும் எஸ்.ஏ.பி., ஆகிய நான்கு கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும். திண்டிவனம், விழுப்புரம் மற்றும் ஆரணியில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 7ம் தேதி துவங்குகிறது. தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், ஆகஸ்ட் 31ம் தேதி தான் வெளியிடப்படுகிறது. இதன்பிறகு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த, ஓரிரு நாட்கள் தேவைப்படும். அதனால், தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், செப்டம்பர் 7ம் தேதி துவக்கப்படுகிறது. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.