குழந்தைகள் தொடர்பான புகார் ஓராண்டில் 1,201 அழைப்பு பதிவு
ஈரோடு: குழந்தைகள் தொடர்பாக, 1,201 புகார்கள் கடந்த ஓராண்டில் உதவி மையத்துக்கு வந்துள்ளன.பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உதவ, மாவட்ட குழந்தைகள் அலகு உருவாக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இந்த அலுவலகத்தை, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான புகார்களையும் தெரிவிக்கலாம். கடந்த ஓராண்டில் மட்டும், ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகள் துன்புறுத்தல், பிற உதவிகள், குடும்பம் சார்ந்த குழந்தைகளுக்கான மனநல ஆலோசனை, பள்ளி கல்வித்துறை தொடர்பான பிரச்னைகள், குழந்தை தொழிலாளர் புகார் என, 1,119 போன் அழைப்புகள் வந்துள்ளன. தவிர தகவல்கள் சார்ந்த, 24 அழைப்பு, பிற அழைப்புகள் என, 1,201 போன் அழைப்புகள் உதவி மையத்துக்கு வரப்பெற்றுள்ளன. புகார்கள் தெரிவிக்கும் எண், நபர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும். அதேநேரம், அப்பிரச்னை தொடர்பான ரகசிய விசாரணை நடத்தப்பட்டு, தேவை அடிப்படையில் போலீஸ், சமூக நலத்துறை, பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து குழந்தைகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.