ஓட்டுநர் உயிரை காப்பாற்றிய மாணவருக்கு துணிச்சல் விருது
ஷிவமொக்கா: கடந்தாண்டு வைக்கோல் கட்டும் இயந்திரத்தில் சிக்கிய டிராக்டர் ஓட்டுநரை காப்பாற்றிய, 8 ம் வகுப்பு மாணவருக்கு, மாநில அரசு '2025 - 26ம் ஆண்டுக்கான துணிச்சல் விருது' அறிவித்து உள்ளது.ஷிவமொக்கா மாவட்டம், சாகரின் ஹடிபிசு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசந்திரா - சுசீலா தம்பதி. இவர்களின் மகன் மது. சோரப்பில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்தாண்டு ஒரு நாள் ஞாயிற்றுகிழமை, வீட்டில் மது இருந்தார். பக்கத்து வீட்டின் முன் ஷிகாரிபுராவின் பன்னுார் கிராமத்தை சேர்ந்த மதன், தனது வீட்டின் முன், வைக்கோல் கட்டும் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.திடீரென, மதனின் கை, இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது. இவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மது, டிராக்டரில் ஏறி, இயந்திரத்தை நிறுத்தினார். இதனால் மதனின் கையும், உயிரும் தப்பியது.இத்தகவல் அறிந்த மாநில அரசு, மதுவுக்கு நேற்று '2025 - 26ம் ஆண்டுக்கான துணிச்சல் விருது' அறிவித்து உள்ளது. இதையறிந்த மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் அருண்பிரசாத், மாணவரை தனது வீட்டுக்கு வரவழைத்து கவுரவித்தார்.பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடக்கவுள்ள விழாவில், மாணவருக்கு முதல்வர் சித்தராமையா விருது வழங்க உள்ளார். இது குறித்து மாணவர் மது கூறுகையில், ''சம்பவ தினத்தன்று ஓட்டுநர் கை, இயந்திரத்தில் சிக்கிக் கொண்டு அலறினார்.' 'என்ன செய்வது என்று தெரியாமல், டிராக்டர் இயந்திரத்தை அணைத்தேன். தேவைப்படுவோருக்கு உதவ விரும்பினேன். ஆனால் என் பணியை பாராட்டி, மாநில அரசு விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.