பேஸ்புக் தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
புதுடில்லி: பேஸ்புக் சமூக வலைதளம், அதன், மென்பொருள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு, நான்கு கோடியே, 84 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக் தன் மென்பொருள் பயன்பாட்டில் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து, சுட்டிக் காட்டுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறது. இது குறித்து, பேஸ்புக் நிர்வாகி ஆடம் ரூடர்மான் கூறியதாவது: இந்தியாவில், 14.2 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மென்பொருள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் முன்னணியில் உள்ளனர்; அவர்களின் ஆய்வுகள் மிகுந்த பயனளிக்கின்றன. கடந்த, 2011ல் பரிசளிப்பு திட்டம் துவங்கியதில் இருந்து, இதுவரை தவறை கண்டறிந்த, இந்தியர்களுக்கு, 4.84 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளோம்.