உள்ளூர் செய்திகள்

மருத்துவ இரண்டாம் கட்ட கலந்தாய்வு?

தமிழகத்தில் உள்ள 17 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஜுன் 30ம் தேதி துவங்கி ஜுலை 6ம் தேதியுடன் முடிவடைகிறது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளில் சேர்வதில்லை. அவ்வாறு விடுபட்ட இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள் அந்தந்த மருத்தவக் கல்லூரிக்கு ஜுலை 22ம் தேதி சென்று மருத்துவ பரிசோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும். எனவே அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள், அன்றைய தினம் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வார்கள். எனவே, அனுமதிக் கடிதம் பெற்றவர்கள் கல்லூரியில் சேர்வார்களா என்பது அன்றைய தினம் உறுதி செய்யப்படும். அவ்வாறு சேராத மாணவர்களால் ஏற்படும் காலியிடங்கள் குறித்த தகவல் ஜுலை 25ம் தேதிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிற்கு தெரிந்துவிடும். காலியிடங்களின் எண்ணிக்கை உறுதியானதும் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கான தேதி முடிவு செய்யப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 600க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள், சென்னை போரூரில் துவக்கப்பட்டுள்ள மாதா மருத்துவக் கல்லூரியிலிருந்து கிடைக்கும் 75 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்படும் பி.டி.எஸ். காலியிடங்கள், 800க்கும் மேற்பட்ட சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு ஜுலை மாத இறுதியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு ரேங்க் பட்டியலில் உள்ள கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அழைப்பு அனுப்பப்படும் என்றும அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்