வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைப்பு
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில், நடக்கவிருந்த 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே வினாத்தாள் கொண்ட, 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. ஜனவரி 30ம் தேதி நடக்கவிருந்த சமூக அறிவியல் வினாத்தாள் வெளியானதாக தகவல் பரவியது. ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள மாணவர்களிடம், இவ்வினாத்தாள் இருப்பதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்தனர். வெளியானது எப்படி?: ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் வினாத்தாள் அச்சடிக்க, கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கிருந்து அனுப்பிய வினாத்தாள் பார்சல், வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்க வேண்டும் அல்லது ராயப்பன்பட்டியில் உள்ள ஏதாவது பள்ளியிலிருந்து வினாத்தாள் வெளியாகியிருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். முதன்மை கல்வி அதிகாரி ஸ்ரீதேவி கூறுகையில், "வினாத்தாள் வெளியானது உண்மை. இதுகுறித்து, தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தேர்வு தேதியை ஒத்தி வைத்துள்ளோம்" என்றார்.