கவுன்சிலிங்கில் கல்லூரி பெயருக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில், மொத்தமுள்ள 412 இன்ஜினியரிங் கல்லூரிகளில், 72 கல்லூரிகள் இந்த ஆண்டு புதிதாக துவக்கப்பட்டவை. கடந்த ஜூலை 10ல் துவங்கிய கவுன்சிலிங் வரும் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில், மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த இரு வாரங்களில் 32 ஆயிரத்து 932 இடங்கள் நிரம்பியுள்ளன. இதுகுறித்து ஜெயப்பிரகாஷ்காந்தி தெரிவித்தது: கே.ஜி.ஐ.எஸ்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களில் உள்ள படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். வேலம்மாள், ஆர்.எம்.கே., ராஜலட்சுமி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ள புதிய கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக இருந்தது. இக்கல்வி நிறுவனங்களில், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு மிகக்குறைவான இடங்களே உள்ளன. இக்கல்லூரிகளில் 190க்கும் அதிகமாக ‘கட்-ஆப்’ எடுத்த மாணவர்கள் கூட, பாடங்களை தேர்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள, இன்டஸ்ட்ரியல், மைனிங், மானுபாக்சரிங், ரப்பர் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகள் முதல் இரண்டு வார கவுன்சிலிங்கில் முடிந்துவிட்டன. உதாரணமாக, புரொடக்சன் இன்ஜினியரிங் பிரிவில் இருந்த 299 இடங்களில் 255 இடங்கள் நிரம்பிவிட்டன. எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கூட பெண்கள் அதிகம் தேர்வு செய்துள்ளனர். இப்பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 4,364 இடங்களில் 2,032 இடங்களை மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். இந்த பிரிவில் தமிழகம் முழுவதும் 14,969 இடங்கள் உள்ளன. இதேபோல், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் ஒதுக்கப்பட்ட 659 இடங்களில் 136 இடங்களை மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்பு இல்லாத ஏரோநாட்டிக்கல் துறையை பொதுவாக மாணவிகள் விரும்புவதில்லை. இம்முறை இப்பிரிவு மாணவிகளிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது. இது அடுத்த கட்ட கவுன்சிலிங்கிலும் தொடரும் வாய்ப்புள்ளது. மொத்தம் 14,426 இடங்களைக் கொண்ட, மெக்கானிக்கல் துறையில் இதுவரை 4,568 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துறையை தேர்வு செய்த மாணவிகள் எண்ணிக்கை வெறும் 73 மட்டுமே. அதேபோல் இதுவரை புரொடக்சன் இன்ஜினிரிங் துறையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் 5 மாணவிகள் மட்டுமே அத்துறையை தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கலை விட ஏரோநாட்டிக்கல் சயின்சுக்கு மாணவிகள் ஆர்வம் காட்டியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 22,421 இடங்கள் கொண்ட, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் துறையில், 8,494 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இத்துறையை 5,202 மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். கவுன்சிலிங் தொடங்கிய முதல் சில நாட்களில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இந்நிலை தற்போது மாறியுள்ளது. இத்துறைகளில் தற்போது பெண்கள் விரும்பி சேர்ந்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், தியாகராஜர், பி.எஸ்.ஜி., எஸ்.எஸ்.என்., ஸ்ரீவெங்கடேஸ்வரா, செயின்ட் ஜோசப், வேலம்மாள், ஆர்.எம்.கே., உள்ளிட்ட நிறுவனங்களில் இத்துறையில் இடங்கள் வேகமாக நிரம்பின. புதிதாக துவங்கப்பட்டுள்ள, என்விரான்மென்டல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. மொத்தமுள்ள 412 கல்லூரிகளில், 130 கல்லூரிகளில் 15 இடங்களே மட்டுமே நிரம்பியுள்ளன. 72 கல்லூரிகளில் இன்னும் ஓர் இடம் கூட நிரம்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.